வூஹான் கிருமித் தொற்று காரணமாக சீனாவில் மாண்டோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்தது.
இந்தக் கிருமி மேலும் வேகமாகப் பரவும் சாத்தியம் இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வூஹான் கிருமியின் வீரியம் அதிகரித்து வருவதாகவும் அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்றும் ஆணையம் அச்சம் தெரிவித்துள்ளது.
இதுவரை 2,300 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கிருமி கடந்த மாதம் சீனாவில் உள்ள வூஹான் நகரில் இருக்கும் கடல் உணவு, வனவிலங்கு சந்தையில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வூஹான் கிருமி பற்றி மிகக் குறைவான தகவல்கள் மட்டுமே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நோய் மிக வேகமாகப் பரவுவதாகவும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினர்.
இந்தக் கிருமித் தொற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும்வரை வனவிலங்கு வர்த்தகத்தை சீனா நிறுத்திவைத்துள்ளது.
இதற்கிடையே வூஹானுக்கும் வெளியே சீனாவின் மற்ற பகுதிகளுக்கும் வூஹான் கிருமி பரவியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,975 பேருக்கு அந்நோய் தொற்றியுள்ளது. ஆக அண்மையில் 688 பேருக்கு வூஹான் கிருமி தொற்றியுள்ளது. அவர்களில் 324 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹூபெய் மாகாணத்தில் குறைந்தது 52 பேர் மரணம் அடைந்தனர். ஷங்ஹாய் நகரில் வூஹான் கிருமித் தொற்று காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 88 வயது முதியவர் வூஹான் கிருமித் தொற்றின் காரணமாக மாண்டார்.
வூஹான் கிருமித் தொற்று ஏற்பட்டு ஒருநாளிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகள் தென்படலாம் என்றும் அறிகுறிகள் தென்படாதபோதிலும் அந்த நோய் பரவக்கூடும் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைய அமைச்சர் மா சியாவ்வெய் எச்சரிக்கை விடுத்தார்.
அந்த வகையில் 2002ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரை உலகெங்கும் ஏறத்தாழ 800 பேரின் உயிர்களைப் பறித்த சார்ஸ் நோயைவிட இது ஆபத்துமிக்கது என்றார் அவர். சார்ஸ் நோயும் சீனாவில் உருவானது.
இதற்கிடையே மிகவும் மோசமான சூழ்நிலையை சீனா எதிர்கொள்வதாக அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்தார். கிருமித் தொற்றை முறியடிக்க தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து மருத்துவக் குழுக்கள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சீன அரசாங்கம் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.