வாஷிங்டன்: புதுவகை கொரோனா கிருமித்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வூஹான் நகரில் இருந்து அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரிகள் அனைவரையும் குறிப்பிட்ட சில தனிநபர்களையும் வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சிறப்பு விமானம் மூலம் நாளை அவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வூஹானில் உள்ள தனது நாட்டவர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
“வூஹானில் உள்ள ஜப்பானிய குடிமக்கள் அனைவரையும், அவர்கள் விரும்பும் பட்சத்தில், தாய்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வர சிறப்பு விமானம் உள்ளிட்ட எல்லாவித நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று அபே கூறியுள்ளார்.
முன்னதாக, கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஹுபே மாநிலத்தில் மட்டும் 430 ஜப்பானியர்கள் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.