வாஷிங்டன்: ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளியல் தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாவத் ஸாரிஃப், ‘டெர் ஸ்பீகல்’ எனும் ஜெர்மானிய வார இதழுக்கு அளித்த நேர்காணலைத் தொடர்ந்து டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், அதற்குமுன் பொருளியல் தடைகள் நீக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். தேவையில்லை, நன்றி!” என்று ஆங்கிலத்திலும் ஃபார்சி மொழியிலும் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இம்மாதம் 3ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்து ஈரானிய தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது. இதையடுத்து, அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியது.
இதையடுத்து, அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்கப் படையினர் 34 பேருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.