வூஹான் பகுதியில் உள்ள ஒரு கடலுணவு சந்தையில் விற்கப்பட்ட வனவிலங்குகளுக்கும் தற்போது நான்கு கண்டங்களுக்குப் பரவியுள்ள புதிய கொரோனா கிருமித் தொற்றுக்கும் தொடர்பு உண்டு என்று பலர் கூறி வந்த நிலையில், அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தைச் (சிடிசி) சேர்ந்த நிபுணர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
வூஹானில் அமைந்துள்ள ஹுவானான் கடலுணவு மொத்த வியாபாரச் சந்தையிலிருந்து சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் இது தெரிய வந்ததாகக் கூறப் படுகிறது.
‘சிடிசி’யின் உத்தரவின்படி அதற்குக் கீழ் இயங்கும் கிருமி நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான தேசிய கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் சந்தையிலிருந்து சுற்றுச்சூழல் மாதிரிகளை இம்மாதம் முதல் தேதியன்றும் 12ஆம் தேதியன்றும் சேகரித்தனர்.
பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மொத்தம் 585 சுற்றுச்சூழல் மாதிரிகளை வகைப்படுத்தத் தொடங்கினர்.
அவ்வாறு வகைப்படுத்தியதில் 33 மாதிரிகள் கிருமித் தொற்று தொடர்பான அமிலத்தைக் கொண்டிருந்ததைக் கழகம் கண்டறிந்துள்ளது.
இந்த 33 மாதிரிகளில் 31 மாதிரிகள் சந்தையின் மேற்குப் பகுதி களிலிருந்து எடுக்கப்பட்டவை.
மேற்குப் பகுதியில்தான் வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் கடைகள் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளன.
இதன்வழி வனவிலங்குகளின் விற்பனைக்கும் இப்புதுவகை கொரோனா கிருமித் தொற்றுக்கும் தொடர்பு உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிருமித் தொற்றுச் சம்பவங்கள் நிகழும் இடங்களை ஆராய்ந்ததில் சம்பந்தப்பட்ட கடலுணவு சந்தைக்கும் கிருமித் தொற்றுக்கும் தொடர்பு உள்ளது என்று முன்னரே நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதற்கிடையே சார்ஸ் நோய்க்குக் காரணமான கொரோனா கிருமி வகை வௌவாலிடமிருந்து ஒரு பூனை வகைக்குப் பரவியது போலவே இப்புதிய கொரோனா கிருமியும் வௌவாலிடமிருந்து வேறொரு பாலூட்டி விலங்குக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.