ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றாலும், நான்கு கண்டங்களில் பரவியுள்ள அக்கிருமித்தொற்றால் கிட்டத்தட்ட 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக தயார்நிலையை அதிகரிக்க இந்தோனீசியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் மற்ற நாடுகள் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தோனீசிய அதிகாரிகள் வழக்கம்போல செயல்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.
அண்மையில் ஜகார்த்தாவுக்கு திரும்பிய வூஹானில் படிக்கும் இந்தோனீசியர் ஒருவர், கொடிய வைரஸ் முதலில் தோன்றிய நகரத்திலிருந்து வரும் பயணிகளை ஆய்வு செய்ய விமான நிலைய அதிகாரிகள் கூடுதல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த மாணவி, தனது தனிப்பட்ட தகவல்கள், பயணத் தகவல்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சுகாதார எச்சரிக்கை அட்டையை அதிகாரிகளிடம் கொடுத்தாலும் பான்டென், டாங்கேராங்கில் உள்ள சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலைய அதிகாரிகள் அதை வாங்கவில்லை என்று சொன்னார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய விமான நிலைய சுகாதார அலுவலகத் தலைவர் அனஸ் மருஃப், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருவதால் அதிகாரிகள் அனைத்து பத்திரங்க ளையும் வாங்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்றார். ஆனால் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் தென்பட்டதற்காக சீனாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட நாடு முழுவதும் ஏராளமான நபர்கள் கடந்த சில நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், புதிய வைரஸால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் உடனடியாக அறிவித்தது.