பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது மூவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஓர் ஏவுகணை தூதரகத்தின் உணவகத்தில் விழுந்ததாகவும் அப்போது உணவருந்தியவர்களில் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர் அமெரிக்கரா அல்லது தூதரகப் பணியில் உள்ள ஈராக்கைச் சேர்ந்தவரா எனத் தெளிவுபடுத்த அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டது.
மற்ற இரு ராக்கெட்டுகள் உணவகத்தின் அருகில் விழுந்ததாக கூறப்படும் நிலையில் அவற்றால் பாதிப்புகள் ஏற்பட்டனவா என தகவல் ஏதும் இல்லை. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈராக் பிரதமர் அப்துல் மஹதி, இத்தகைய தாக்குதல்களால் தங்கள் நாடு போர்ச் சூழலுக்குள் இழுக்கப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர். இந்த நிலையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஈராக்கில், ஈரான் புரட்சிப் படையின் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்தில் இருந்து ஈரான், ஈரான் ஆதரவு போராளிகள் 14க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.