வூகான் கொரோனோ கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் கிருமித் தொற்று தொடங்கியதாகக் கருதப்படும் வூஹானில் வசித்துவரும் அந்த 27 வயதுப் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்த அவருக்கு முறையான சிகிச்சையும் அளிக்க முடியவில்லை.
கிருமித் தொற்றுக்காக அளிக்கப்படும் சிகிச்சை அவரது கருவிலிருக்கும் சிசுவைப் பாதிக்குமோ என்ற அச்சத்தில் சிகிச்சை முழுமையாக அளிக்கப்படாத நிலை இருந்தது.
அதனை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மிகுந்த காய்ச்சலுடனும், இடைவிடாத இருமலுடனும் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அபாயகரமானது என்று கூறப்பட்டது.
வூஹான் யூனியன் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத் துறையின் துணை இயக்குநர் ஸாவோ யின், அவரது குழுவினரால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்கான அந்த அறுவை சிகிச்சையின்போது, இரண்டு பாதுகாப்பு உடைகள், ஒரு முகக் கவசம், ஒரு பாதுகாப்புக் கண்ணாடிகள் போன்றவற்றை மருத்துவர் குழு அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது.
ஸயோயான் என்று அறியப்படும் அந்தப் பெண் 37 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதாக உள்ளூர் தொலைக்காட்சி தெரிவித்தது.
#தமிழ்முரசு #வூஹான் #கர்ப்பிணிக்குஅறுவைசிகிச்சை