தைப்பே: உலகெங்கிலும் உள்ள மக்கள் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முகக்கவசங்களை வாங்கி சேர்த்து வைத்துக்கொள்கின்றனர்.
இணைய வர்த்தகம், கடைகளில் இருந்து மக்கள் தங்களுக்கு தேவையான முகக்கவசங்களை வாங்க முற்படுகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி அமேசான், அலிபாபா இணையத்தளங்களில் வைரஸ் தடுப்பு முகக்கவசங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளில் மக்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று முககவசங்களை வாங்கிச் செல்வதாக கூறுகிறது ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி.
வெளிநாடுகளில் வசிக்கும் சீன நாட்டவர்கள் என்95 முகக்கவசங்களை வாங்கி, அவற்றை சீனாவில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புவதாகவும் சிலர் அவற்றை இணையத்தளங்களில் மறு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, முகக்கவசங்கள் ஏற்றுமதியை தைவான் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது அந்நாட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த முடிவை விமர்சித்துள்ள தைவான் பிரபலங்கள் சிலர், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கு கொஞ்சம் இரக்கம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ள
னர்.
ஆனால் அவர்களது இந்த விமர்சனத்தை சமூக ஊடகவாசிகள் சிலர் சாடியுள்ளனர்.
வூஹான் கிருமித்தொற்று பெருமளவில் பரவத் தொடங்கியது முதல் இங்கு முகக்கவசங்களின் விற்பனை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த இரண்டு வாரங்களில் பல சில்லறை கடைகளில் முகக்கவசங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
மேலும் சீனப் புத்தாண்டு விடுமுறை காரணமாக, முககவசங்கள் உற்பத்தி குறைந்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தைவான் தலைவர் கடந்த 24ஆம் தேதி கூறினார்.
இந்நிலையில், தைவானில் எட்டாவது வூஹான் தொற்றுச் சம்பவம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.