கோலாலம்பூர்: மலேசியாவில் இவ்வாண்டு தைப்பூச விழா ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் ஆகப்பெரிய நிகழ்வுகளில் தைப்பூசமும் ஒன்று. கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.
இவ்வாண்டு தைப்பூசம் அடுத்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் கொரோனா கிருமி பரவல் காரணமாக தைப்பூசம் போன்ற மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகள் ரத்து செய்யப்படலாம் என்று மலேசிய செய்தி இணையத்தளமான ‘தமிழர் ஊடகம்’ துணைப் பிரதமரை மேற்கோள்காட்டி தெரிவித்தது.
தைப்பூசம் போன்ற லட்சக்கணக்கானோர் கூடும் விழாக்களை ரத்து செய்வது குறித்த முடிவு, உலக சுகாதார நிறுவனம் வெளியிடும் தகவல்களைப் பொறுத்து அமையும் என்று மலேசியாவின் துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார். மலேசியாவில் மேலும் ஒருவருக்கு ‘கொரோனா’ கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு மொத்தம் எட்டுப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வான் அஸிஸா வான் இஸ்மாயில், “கிருமித் தொற்றின் நிலவரத்தைப் பார்த்து முடிவு செய்யலாம்,” என்றார்.
மலேசிய தைப்பூச விழாவில் மலேசியர்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுப்பயணிகளும் கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு தைப்பூசத்தின்போது சுமார் 1.6 மில்லியன் மக்கள் அங்கு கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இத்தகைய கூட்டங்களை உலக சுகாதார நிறுவனம் நடத்த வேண்டாமென்று கூறினால் அதன் தொடர்பில் தகவல் வெளியிடுவோம்,” என்று திருவாட்டி வான் அஸிஸா கூறியதாக ‘தமிழர் ஊடகம்’ குறிப்பிட்டது.
விளையாட்டு நிகழ்ச்சிகள், சமயம் சார்ந்த புனித யாத்திரைகள் போன்ற பெருங்கூட்டங்கள் பொதுமக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும் என்றும் அந்தக் கூட்டங்கள் நடைபெறும் நாடு அல்லது நகரத்தின் பொதுச் சுகாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.