சீனாவிலிருந்து வரும் சுற்றுப் பயணிகள் இந்தோனீசியாவுக்குள் நுழைய நேற்று (பிப்ரவரி 2) அந்நாடு தடை விதித்துள்ளது. ஹுபெய் வட்டாரத்திலிருந்து இந்தோனீசியர்கள் தாயகத்துக்கு அழைத்துவரப்பட்டதற்கு அந்நாட்டு குடிமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதன் கிழமை முதல் சீனாவுக்கு விமானச் சேவைகளை இந்தோனீசியா தற்காலிகமாக நிறுத்தவுள்ளது. கடந்த 14 நாட்களில் சீனாவில் இருந்தோர் இந்தோனீசியாவுக்குள் நுழையவோ அல்லது இந்தோனீசியா வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லவோ அனுமதி கிடையாது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடி செய்தியாளார் கூட்டத்தில் தெரிவித்தார்.
(காணொளியை முழுமையாகக் காண முழுத் திரை modeக்கு செல்லவும்.)
ஹுபெய் மாகாணத்திலிருந்து 243 இந்தோனீசியர்கள் விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர். விமானத்திலிருந்து இறங்கியவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.
அவர்கள் நட்டுனா தீவில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர். விமானப் பணியாளர்களையும் சேர்த்து மொத்தம் 285 பேர் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
விமானப் பயணத்தின்போது அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை இந்தோனீசியாவில் யாருக்கும் நோவல் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்படாவிட்டாலும் அதன் அண்டை நாடான பிலிப்பீன்சில் ஒருவர் அந்த கிருமித் தொற்று காரணமாக உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கிருமித் தொற்றால் சீனாவுக்கு வெளியில் உயிரிழந்த முதல் நபரும் அவரே.
#இந்தோனீசியா #தமிழ்முரசு #வூஹான்