சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலானோர் நோவல் கொரோனா கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தாய்லாந்து நாட்டில்தான் என்று கூறப்படும் வேளையில், அந்தக் கிருமித் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் தற்போது 19 பேர் கொரோனா கிருமித் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா கிருமித் தொற்று காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக தாய்லாந்தின் மருத்துவர் கிரிங்கஸ்க் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் இந்த குழு எய்ட்ஸ் நோயை குணப்படுத்தவதற்கான எச்ஐவி தடுப்பு மருந்தில் சில மாற்றங்கள் செய்து நோயாளிகளுக்கு வழங்கியது. அதில் சரிவர பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, வழக்கமாக காய்ச்சலுக்கு கொடுக்கும் தடுப்பு மருந்துடன் எச்ஐவி தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தையும் கலந்து கொரோனா கிருமித் தொற்று நோயாளிகளுக்குக் கொடுத்ததில் நோயாளிகளின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற 71 வயது பெண் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பேங்காக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இந்த மருந்துக் கலவையைக் கொண்டு சிகிச்சை அளித்ததாகவும் அவரது உடல் நலம் நன்கு தேறியிருப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது அவரது சுவாசப் பாதையில் கிருமித்தொற்று இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தப் புதிய சிகிச்சை முறையை மற்ற நாடுகளும் சோதித்துப் பார்ப்பதாகவும் அதில் வெற்றி கிடைத்தால், கொரோனா கிருமித் தொற்றை எளிதில் முறியடித்து விடலாம் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
#வூஹான் #கொரோனா #தாய்லாந்து #தமிழ்முரசு