சீனாவில் சார்ஸ் கிருமித்தொற்றால் மாண்டவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அண்மைய நோவல் கொரோனா கிருமித்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை தாண்டிவிட்டது.
நேற்றைய நிலவரப்படி, சீனாவில் மட்டும் கொரோனா கிருமித்தொற்றுக்கு 361 பேர் பலியாகியுள்ளனர். அந்தக் கிருமித்தொற்றால் பிலிப்பீன்ஸ் சென்ற சீன ஆடவர் ஒருவரும் மாண்டுபோனார். உலகம் முழுவதும் 17,000க்கு மேற்பட்டோர் அக்கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2002, 2003ஆம் ஆண்டுகளில் பரவிய ‘சார்ஸ்’ கிருமித்தொற்றால் சீனாவில் மட்டும் 349 பேர் உயிரிழந்தனர். அதைக் காட்டிலும் கொரோனா கிருமித்தொற்று உயிரிழப்பு விகிதம் குறைவு என்றபோதிலும், அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாண்டோர் எண்ணிக்கையும் கூடியது.
இதனிடையே, கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த தான் போராடி வரும் நிலையில், அதை மிகைப்படுத்திக் கூறியும் பொருத்தமற்ற நடவடிக்கைகளாலும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்கா மீது சீனா குற்றம் சுமத்தியுள்ளது.
“கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில், அமெரிக்கா குறிப்பிடும்படியாக சீனாவிற்கு எந்த உதவியையும் செய்யவில்லை. ஆனால், வூஹானில் இருந்து தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய முதல் நாடு அதுதான். அதேபோல, சீனச் சுற்றுப்பயணிகளுக்கும் முதன்முதலாக அந்நாடுதான் தடை விதித்தது,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் கூறினார்.
ஆனால், சீனாவுக்குத் தான் உதவியதாக அமெரிக்கா சொல்கிறது. கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தனது பொதுச் சுகாதார நிபுணர்களை உதவிக்கு அனுப்புவதாகக் கூறியும் சீனா இதுவரை அதற்குப் பதிலளிக்கவில்லை என்றார் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன்.