கோலாலம்பூர்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையின் தொடக்க நாளான நேற்று முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
அவருக்குக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் நேற்றுக் காலை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரோஸ்மாவுக்கு அடுத்த வாரம் வரையில் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த அவர், பிப்ரவரி 2ஆம் தேதியிடப்பட்ட மருத்துவச் சான்றிதழை நீதிபதியிடம் வழங்கினார்.
இருப்பினும், ஒரு நாள் மட்டும் விசாரணையைத் தள்ளிவைப்பதாக நீதிபதி முகமது ஜைனி மஸ்லான் அறிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை தேதி ஒதுக்கப்படாததால் ரோஸ்மாவுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையின் தொடக்க நாள் புதன்கிழமை என்று அவர் உத்தரவிட்டார்.
ரோஸ்மாவின் உடல்நிலை பற்றி நீதிபதி விசாரித்தபோது, அவருக்கு கழுத்து வலி, மூட்டு வலியோடு தலைசுற்றலும் இருப்பதாக வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் கூறினார்.

