கொரோனா கிருமி தொற்று அறிகுறிகள் இல்லாதபோதும் பரவக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அப்படி இருந்தால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமானது என்பதே நிபுணர்களின் கவலை.
சீனாவில் மருத்துவர்கள் இந்தக் கிருமித் தொற்று எவ்வித அறிகுறியும் இன்றி பரவக்கூடியது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதன்தொடர்பில் நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையின் ஜனவரி 30ஆம் தேதி இதழலில் வெளிவந்த கடிதம் இதனை உறுதிசெய்துள்ளது.
அதில் ஷங்காயிலிருந்து வந்த ஒரு பயணியின் மூலம் ஜெர்மனியில் இந்தக் கிருமித் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அவர் ஜெர்மனிக்கு வந்தபோது அவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் அறிவியலாளர்களிடையே பெருத்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. ஆனால், தற்போது ஜெர்மனியில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த தகவலின் நம்பகத்தன்மை குறித்து ஐயங்களை எழுப்பியுள்ளனர்.