கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 73 பேர் அக்கிருமித்தொற்றால் மாண்டனர். இதையடுத்து, ஒட்டுமொத்தத்தில் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு 565ஆக உயர்ந்து விட்டது. சீனாவில் மட்டும் 563 பேர் அக்கிருமித்தொற்றால் மாண்டனர். ஹாங்காங்கிலும் பிலிப்பீன்சிலும் தலா ஒருவர் உயிரிழந்தார். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,000ஐத் தாண்டிவிட்டது.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் நேற்று முன்தினம் வரை 1,153 பேர் உடல்நலம் தேறி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர் என்று சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மட்டும் 261 பேர் சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தனது அன்றாட அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்நிலையில், கிருமித்தொற்று முதன்முதலாகக் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் 2,000 சதுரமீட்டர் பரப்பளவில் புதிய அவசரகால மருத்துவ ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. ‘ஹுவோ யான்’ என அழைக்கப்படும் அந்த ஆய்வகத்தில் நாளொன்றுக்கு 10,000 ரத்த மாதிரிகளைச் சோதனை செய்ய முடியும் எனக் கூறப்பட்டது.