கிருமித்தொற்று சந்தேகத்தில் 'எஸ்சிடிஎஃப் ஆம்புலன்ஸ்' சேவையை நாடிய 219 பேர்

கிருமித்தொற்று சந்தேகத்தில் 'எஸ்சிடிஎஃப் ஆம்புலன்ஸ்' சேவையை நாடிய 219 பேர்

2 mins read
27600990-f92d-49c7-a4f8-ed218faece76
கொரோனா கிருமித் தொற்று தொடர்பான அழைப்புகளை ஏற்ற எஸ்சிடிஎஃப் அவசர சிகிச்சை வாகன ஊழியர்களைச் சந்தித்த உள்துறை விவகாரங்களுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின்,  எஸ்சிடிஎஃப் அவசர சிகிச்சை வாகன ஊழியர்களைப் பாதுகாப்பு சாதனத்துடன் பார்த்தால் கலவரமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'கொவிட் - 19' எனப்படும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் இன்று (பிப்ரவரி 12) காலை எட்டு மணி நிலவரப்படி மொத்தம் 219 பேர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) அவசர வாகனத்தில் (ஆம்புலன்சில்) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக எஸ்சிடிஎஃப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கடந்த சுமார் ஒரு மாத காலத்துக்குட்பட்ட இந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டதாகவும் சில அழைப்புகள் தனியார் மருத்துவர்கள், பலதுறை மருந்தகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அனைத்து எஸ்சிடிஎஃப் அவசர சிகிச்சை வாகனப் பணியாளர்களும் முழு தனிப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை (PPE) அணிந்திருப்பர் என்றும் இன்று காலை அறிவிக்கப்பட்டது.

கொரொனா கிருமித் தொற்று அபாய எச்சரிக்கை 'டோர்ஸ்கான்' குறியீடு ஆரஞ்சு நிறத்துக்கு மாறுவதற்கு முன்புவரை, கொரொனா கிருமித் தொற்று இருப்பதாக சந்தேகிப்போரின் அழைப்புகளை ஏற்போர் மட்டுமே முழு தனிப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை அணிந்திருந்தனர். ஆனால், இன்று அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறை அனைத்து எஸ்சிடிஎஃப் அவசர சிகிச்சை வாகன அழைப்புகளை ஏற்கும் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

கொரோனா கிருமித் தொற்று தொடர்பான அழைப்புகளை ஏற்ற எஸ்சிடிஎஃப் அவசர சிகிச்சை வாகன ஊழியர்களைச் சந்தித்த உள்துறை விவகாரங்களுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், எஸ்சிடிஎஃப் அவசர சிகிச்சை வாகன ஊழியர்களைப் பாதுகாப்பு சாதனத்துடன் பார்த்தால் கலவரமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா கிருமித் தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அவசர சிகிச்சை வாகனத்துக்கு அழைப்பு விடுப்பவர்களிடம் அவர்களது நோய் அறிகுறி பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அங்கு அவசர சிகிச்சை வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது.

நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த பிறகு, அந்த வாகனம் முழுமையாக சுத்தப்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கை சுமார் 20 நிமிடம் நீடிக்கிறது.

அந்த வாகனத்தில் நோயாளியை அழைத்துச் சென்ற ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை அகற்றி முறையாக அப்புறப்படுத்தி விடுகின்றனர்.

இந்தச் சூழ்நிலைக்குத் தயாராக இருந்ததாகவும் இதுவரை எஸ்சிடிஎஃப் நடவடிக்கைகளை சுமுகமாக மேற்கொண்டு வருவதாகவும் திரு அம்ரின் அமின் குறிப்பிட்டார்.

#தமிழ்முரசு #SCDF #Covid-19

குறிப்புச் சொற்கள்