ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கடந்தாண்டு காடுகள், நிலங்கள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட புகைமூட்டம் போல் இவ்வாண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு அந்நாட்டு கடற்படை தயாராகி வருகிறது.
சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும் ரியாவ் மாகாணத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்துக்கான அவசர கால நிலையை அறிவித்தது இந்தோனீசியா.
விமானம், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றைத் திரட்டவும், மாகாணத்திற்குக் கூடுதல் உதவிகளை வழங்கவும் இந்த அவசர நிலை அறிவிப்பு ஜகார்த்தாவை அனுமதிக்கும். செயற்கை மழை உருவாக்குவதற்கு சிறிய விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஹெலிகாப்டர்கள் தண்ணீர் குண்டுவீச்சுக்குத் தயாராகி வருகின்றன.
"இது அனைத்து சாத்தியக்கூறுகளையும் எதிர்பார்ப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை," என்று ரியாவ் பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு எட்வர் சாங்கர் ஜகார்த்தா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.