வியட்னாம் தலைநகர் ஹனோய்க்கு அருகில் உள்ள ஆறு கிராமங்கள் கொரோனா கிருமித் தொற்று அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வட்டாரத்தில் ஆறு பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பரவியதையடுத்து அந்த நாடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுமார் 10,000 பேர் வசிக்கும் சொன் லோய் வட்டாரத்தின் அந்த விவசாய கிராமங்களின் எல்லைகளில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த கிராமங்களுக்கு உள்ளே நுழைய சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அங்கிருந்து யாரும் 20 நாட்களுக்கு வேளியேற முடியாது.
சுகாதாரப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் முழு பாதுகாப்புக் கவசத்தில் இருந்தவாறு கிருமிநாசினிகளைத் தெளித்தனர்.
பயிற்சிக்காக வூஹானுக்கு சென்று திரும்பிய வியட்னாமிய தாதி ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது. அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் பரவியது. அவர்களுள் ஒரு 3 மாதக் குழந்தைக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
முதலில் கிருமித்தொற்று கண்ட தாதி மட்டுமே தற்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ளார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
“பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து சொன் லோய் நகரில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராம மக்கள் 20 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்,” என்று அரசாங்க அமைப்புகள் தெரிவித்தன.
#தமிழ்முரசு #வியட்னாம் #கொரோனா #கிராமங்கள்