சவூதி பதிலடி தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு

2 mins read
f024fb0f-8e1e-4559-a284-6d74cab00122
சவூதியின் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஏமனின் தலைநகரமான சானாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி போராளிகள் தெரிவித்திருந்தனர். அவர்கள் வெளியிட்ட காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம். படம்: ஏஎப்பி -

துபாய்: சவூதி அரேபியா தலைமையில் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் காரணமாக ஏமனில் குறைந்தது 31 பேர் மாண்டனர். மாண்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று ஐநா தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏமனில் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதற்குப் பழிதீர்க்கும் வகையில் நேற்றைய வான்வழித் தாக்குதலை சவூதி அரேபியா நடத்தியது.

சவூதியின் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஏமனின் தலைநகரமான சானாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி போராளிகள் தெரிவித்திருந்தனர்.

ஏமனின் அரசாங்க ஆதரவுப் படைக்கு உதவி செய்ய சவூதியின் டோர்னேடோ போர் விமானம் ஏமனின் அல் ஜஃப் மாநிலத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று அனுப்பப்பட்டது. அப்போது அது ஹூதி போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

விழுந்து நொறுங்கிய அந்தப் போர் விமானத்துடன் ஹூதிப் போராளிகள் எடுத்துக்கொண்ட படங்கள் ஊடகத்தில் வலம் வந்தன. சவூதிப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவது அரிது. எனவே, போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் சவூதி உடனடியாக இறங்கியது.

சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் ஹூதிப் போராளிகளுக்கு எதிராகப் போரிடும் பகுதியில் நேற்றைய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் 31 பேர் மாண்டதுடன் 12 பேர் காயமுற்றதாக ஏமனில் இயங்கி வரும் ஐநா மனிதாபிமானப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் லிஸ் கிரான்டோ தெரிவித்தார். இந்தத் தாக்குதல் மிகவும் மோசமானவை என்று திருவாட்டி கிரான்டே சாடினார்.

"அனைத்துலக மனிதாபிமான சட்டத்தின்கீழ் பொதுமக்களைப் பாதுகாக்க போரிடும் படைகளுக்குப் பொறுப்பு இருக்கிறது. ஏமனில் இந்த போர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. இப்போரில் ஈடுபடுவோர் இந்த விஷயத்தில் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். இது அதிர்ச்சியளிக்கிறது," என்று திருவாட்டி கிரான்டே தெரிவித்தார்.

சவூதி நடத்திய தாக்குல் காரணமாக மாண்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது போர் விமானம் போராளிகளின் தாக்குதல் காரணமாக விழுந்து நொறுங்கியதும் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டதாக சவூதி கூறியது. அப்போது இந்தத் தாக்குதல் வேறு வழியின்றி நிகழ்ந்திருக்கக்கூடும் என்று அது கூறியது.

சுட்டு வீழ்த்தப்பட்ட சவூதிப் போர் விமானத்தின் விமானிகளின் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.