பாக்தாத்: ஈராக் தலைநகரம் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து நேற்று பல எறிபடைகள் பாய்ச்சப்பட்டன.
இந்தத் தகவலை அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்டது. ஈராக்கில் அமெரிக்காவுக்குச் சொந்தமான சொத்துகள் மீதான தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன.
நேற்றைய தாக்குதலின் காரணமாக அமெரிக்கத் தூதரகம் எங்கும் எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது. ஆனால் தாக்குதலின் விளைவாக ஏதேனும் உயிர், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்து எறிபடைகள் பாய்ச்சப்படுவதற்கு முன்பு ஈராக்கின் உயர் பாதுகாப்பு வட்டாரத்தைச் சுற்று விமானம் ஒன்று வட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்றைய தாக்குதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது அங்கு இருக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களைக் குறிவைத்து நடத்தப்படும் 19வது தாக்குதலாகும்.
ஈராக்கில் ஏறத்தாழ 5,200 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.
நேற்றைய தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹஷேத் அல் ஷாபிதான் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த அமைப்பு ஈராக்கின் பாதுகாப்புப் படைகளில் அதிகாரபூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ள ராணுவப் படையாகும்.
கடந்த டிசம்பர் மாதத்தில் வட
ஈராக்கில் உள்ள கே1 முகாமில் நடத்தப்பட்ட எறிபடைத் தாக்குதலின் காரணமாக அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் மாண்டார்.
அண்மையில் ஈரானின் புரட்சிப் படைத் தலைவராக இருந்த காசிம் சுலைமானியும் அவரது வலக் கரமாகச் செயல்பட்ட ஹஷேத் அமைப்பின் துணைத் தலைவர் அபு மாஹ்டி அல் முஹான்டிசும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மாண்டனர்.
அவர்கள் இருவரின் மரணத்துக்கு பழிவாங்கப்போவதாக ஹஷேத் அமைப்பு சூளுரைத்துள்ளது.
அமெரிக்கப் படையினர் ஈராக்கைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அது வலியுறுத்தி வருகிறது.