லண்டன்: பிரிட்டனை டென்னிஸ் புயல் தொடர்ந்து வாட்டிவருகிறது.பிரிட்டனில் உள்ள பல பகுதிகளில் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
நே்றறு முன்தினம் வேல்சின் தெற்குப் பகுதியில் உள்ள ஓர் ஆற்றில் விழுந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர். அவரது உடல் போலிசாரால் மீட்கப்பட்டது.
வேல்சின் தெற்குப் பகுதியில் சிவப்பு நிற விழிப்புநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேராபத்து ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு பிரிட்டனில் 594 இடங்களில் வெள்ள எச்சரிக்கை ஒலியை எழுப்பும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்திலிருந்து இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கோர்ன்வால் வரை இந்தச் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வேல்சின் தெற்குப் பகுதியில் உள்ள அபெர்டாரோனில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக பதிவாகி உள்ளது.
கரைபுரண்டோடும் வெள்ளத்தைக் காட்டும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தவாறு உள்ளன.
தங்கள் வீடுகளில் சிக்கித் தவிப்போரைக் காப்பாற்றும் பணியில் பிரிட்டிஷ் மீட்புப் பணியாளர்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பிரிட்டிஷ் ஊடகம் தெரிவித்தது.
“தொடர்ந்து கனமழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேல்சில் தெற்குப் பகுதியில் இந்த நிலை ஏற்படும்.
“இரவு நேரத்தில் வெள்ளத்தால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கக்கூடும். விடுக்கப்படும் எச்சரிக்கைக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று வேல்சின் இயற்கை வள ஆணையம் தெரிவித்துள்ளது.
டென்னிஸ் புயல் காரணமாக இங்கிலாந்திலும் வேல்சிலும் பெருமளவிலான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர்.
இவ்விடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“சில இடங்களை மீட்புப் பணியாளர்கள் சென்றடைய முடியாதபடி பாதைகளை வெள்ளம் மறைத்
துள்ளது. ஆனால் அவ்விடங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களைப் பத்திரமாக மீட்க மீட்புப் பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.
“குடியிருப்பாளர்கள் பாதுகாப்புடன் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, என்று வேல்ஸ் போலிசார் தெரிவித்தனர்.