ஆரவாரமாக வரவேற்கப்பட்ட கப்பல் பயணிகளில் ஒருவருக்கு கிருமித் தொற்று; மேலும் பரவும் அபாயம்

ஆரவாரமாக வரவேற்கப்பட்ட கப்பல் பயணிகளில் ஒருவருக்கு கிருமித் தொற்று; மேலும் பரவும் அபாயம்

2 mins read
7fedc5fa-6755-4838-847c-84878172c4d1
கம்போடியா அனுமதியளித்து வரவேற்றதால் மகிழ்ச்சியுடன் இறங்கிய பயணிகள். படம்: ஏஎஃப்பி -

நோம்பென்: ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட 'வெஸ்டர்டாம்' சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா கிருமித் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதால் எந்த நாடும் அந்தக் கப்பலை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் கடந்த வியாழக்கிழமை கம்போடியா மட்டும் அந்தக் கப்பலுக்கு அனுமதியளித்தது.

இதையடுத்து கப்பலிலிருந்து இறங்கிய பயணிகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கம்போடிய பிரதமர் அவர்களுக்கு பூங்கொத்துகளை கொடுத்து வரவேற்றார்.

கப்பலில் இருந்தவர்களுக்கு கிருமித் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பயணிகளும் நிம்மதிப் பெருமூச்சுடன் கம்போடியாவில் இறங்கினர்.

பயணிகளில் பலர் சுற்றுலாவுக்கும் கடற்கரைக்கும் உடற்பிடிப்பு நிலையங்களுக்கும் ருசித்து மகிழ உணவகங்களுக்கும் சென்றுவிட்டனர்.

சிலர் உலகை சுற்றிவர கிளம்பி விட்டனர். சிலர் தாயகத்துக்குத் திரும்பத் தயாராகிவிட்டனர்.

ஆனால் ஒரே ஒரு பயணி மட்டும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் வெப்ப பரிசோதனையை கடந்து செல்ல முடியவில்லை.

அமெரிக்கரான அவர் கடந்த சனிக்கிழமையன்று தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா கிருமித் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் இவருடன் கப்பலில் பயணம் செய்த பயணிகளும் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கப்பல் பயணிகள் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து சென்றுள்ளதால் கிருமித் தொற்று வேகமாக பரவுக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

இந்தச்சூழ்நிலையில் பயணிகள் மூலம் நோய் பரவுவதை எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்று நிபுணர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

வெஸ்டர்டாம் கப்பலிலிருந்து இறங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தங்களுடைய நாடு களுக்குத் திரும்பியுள்ளதால் கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்துவது சீனாவைவிட சிரமமாகி விடும் என்று டாக்டர் ஷாஃப்னர் சொன்னார்.

கம்போடியாவில் அனுமதிப் பதற்கு முன்பு கப்பலில் இருந்த பயணிகளுக்கு கிருமித் தொற்று இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கப்பல் பயணிகளிடம்இருந்து கிருமி பரவாமல் தடுக்க வேண்டுமானால் குறைந்தது 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும், ஆனால் இது எளிதான காரியமல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

'வெஸ்டர்டாம்' கப்பலிலிருந்து 140க்கும் மேற்பட்ட பயணிகள் மலேசியாவுக்குச் சென்றனர். அவர்களில் அெமரிக்க பெண் மட்டும் கிருமியால் பாதிக்கப்பட்டார்.

இதர பயணிகள், அவரது கணவர் உட்பட அனைவரும் அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் செய்ய அனு மதிக்கப்பட்டனர்.

கப்பலிலிருந்து இறங்கிய 1,000க்கும் மேற்பட்ட பயணிகள் தாயகம் திரும்பும் வழியில் கம்போடியாவின் தலைநகரான நோம்பென்னுக்குச் சென்றனர்.

இம்மாதம் 1ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து 14 நாள் உல்லாசப் பயணத்தை வெஸ்டர்டாம் கப்பல் தொடங்கியது. அதில் 1,455 பயணிகளும் 802 கப்பல் சிப்பந்திகளும் இருந்தனர். முன்னதாக தைவான், தாய்லாந்து, ஜப்பான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் தங்களுடைய கரைகளில் கப்பல் ஒதுங்க அனுமதிக்கவில்லை.

கடைசியில் கம்போடியா அரசு மட்டும் கப்பலுக்கு அனுமதி வழங்கியது.