காணாமல் போன வயதான தம்பதி இனியும் கிடைக்கமாட்டார்கள் என்று அதிகாரிகள் தங்களின் தேடும் பணியைக் கைவிட்டு மீட்பு நடவடிக்கைகளில் இறங்க, இருவரும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஒரு வாரமாகத் தாங்கள் சேற்றுநீரையும் பன்னத்தின் இலைக்காம்புகளையும் உட்கொண்டு சமாளித்ததாக கேரல் கிப்பாஸ்கி (77) மற்றும் இயன் எர்வின் (72) கூறினர்.
போலிசாரின் தேடி மீட்கும் குழுவுக்கு உதவிய 18 வயது தொண்டூழியரும் நாய்களுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நபரும் காட்டுப் பகுதியில் கைகோத்திருந்த தம்பதியைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து உடனே இருவரும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
புதர்களால் ஏற்பட்ட சிறு காயங்களைத் தவிர இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#கலிஃபோர்னியா #தம்பதி #தமிழ்முரசு