வாஷிங்டன்: உலகப் புகழ்பெற்ற சூதாட்டக்கூடங்கள் உள்ள அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் அடுத்த மாதம் உச்சநிலைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள கோரி தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ நேற்று முன்தினம் இத்தகவலை அறிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உச்சநிலைக் கூட்டம் ஒன்று ரத்து செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் கூட்டத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 கிருமித்தொற்றின் காரணமாக, 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியான் உடனான உச்சநிலைச் சந்திப்பு ஒத்திவைக்கப்படுமா என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கேட்கப்பட்டதற்கு மேற்கூறப்பட்ட தகவலைத் திரு பொம்பியோ தெரிவித்தார்.
“ஆசியான் உச்சநிலைக் கூட்டம் ஒத்திவைக்கப்படாது. லாஸ் வேகஸில் அடுத்த மாதம் இரண்டாவது வாரயிறுதியில் அதை ஏற்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகின்றன,” என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் திரு டிரம்ப் பங்கேற்பார் என்றும் மார்ச் 12ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என்றும் அரசதந்திரிகள் கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னமெரிக்க நாடான சிலியில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவிருந்த ‘பசிபிக் ரிம்’ உச்சநிலைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, புதிய கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளுமாறு ஆசியான் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.