பெர்லின்: ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 51 பேருக்கு கொவிட்-19 என்னும் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 66 ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 117க்கு அதிகரித்ததாக தொற்றுநோய் தடுப்புக்கான ராபர்ட் கோச் மருத்துவக் கழகம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து பெரிய அளவிலான அனைத்துலக நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. சளிக்காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் கூட்டங்களைத் தவிர்த்து வீடுகளில் இருக்குமாறு ஜெர்மன் சுகாதார அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். கிருமி உறுதி செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு இன்று முதல் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

