கோலாலம்பூர்: கடந்த வாரத்தில் பல திருப்பங்களை எதிர்கொண்ட மலேசிய அரசியலில், பிரதமர் பதவிக்கான போட்டியில் யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதைவிட, பிரதமர் எவ்வாறு தீர்மானிக்கப்படுவார் என்ற கேள்வியே மேலோங்கி இருந்தது.
இந்நிலையில், மலேசிய மன்னர், பெர்சத்துவின் தலைவர் முகைதீன் யாசினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி நேற்று அவரை பிரதமராக நியமித்தார். இதனால் குழப்பத்திற்கு முடிவு கிடைத்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால் இடைக்கால பிரதமர் மகாதீரையே மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ள பக்காத்தான் ஹரப்பன், 222 உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறியது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே விரைவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றக் கூட்டத்தில், பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதில் குழப்பம் தீரலாம்.
அதாவது பக்கத்தான் ஹரப்பான் மற்றும் மகாதீர் ஒரு வாரத்திற்கு மேல் தங்களுடைய ஆதரவாளர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய சபாநாயகர் முகமட் ஆரிஃப் மொஹமட் யூசோஃப், அமானா நெகாராவிலிருந்து பக்கத்தான் உறுப்பினராக இருந்தது அவர்களுக்கு சாதகமான அம்சமாகும். முகைதீனுக்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பதை முடிவு செய்ய அடுத்த வாரத் தொடக்கத்திலேயே அவர் நம்பிக்கை தீர்மானத்தை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

