துபாயின் கோடீஸ்வர ஆட்சியாளார் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் மீது அவரது முன்னாள் மனைவியும் ஜோர்டான் இளவரசியுமான ஹயா பின்த் அல்-ஹுசைனால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயிருக்கு பயப்படுவதாக தனது நண்பர்களிடம் கூறிய இளவரசி கடந்த ஆண்டு அந்நாட்டிலிருந்து தனது இரண்டு மகள்களுடன் தப்பித்து பிரிட்டன் சென்றார்.
இதைத்தொடர்ந்து கடந்த எட்டு மாதங்களாக துபாயின் ஆட்சியாளருக்கு எதிராக நடந்து வந்த விசாரணையை அடுத்து பிரிட்டன் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு இளவரசிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்தத் தீர்ப்பு வெளியுலகிற்குத் தெரியாமல் இருக்க ஷேக் முகமத் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அதற்காக அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கு பொது நலன் கருதி நிராகரிக்கப்பட்டது.
இதுகுறித்து துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமத் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “அரசாங்கத்தின் தலைவராக, நீதிமன்றத்தின் உண்மை கண்டறியும் செயல்பாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
“இதன் விளைவாக கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே சொல்லும் இந்த ‘உண்மை கண்டறியும்’ தீர்ப்பு வெளியிடப்பட்டுவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மீது கடத்தல், திரும்பி வருமாறு கட்டாயப்படுத்துதல், சித்ரவதை, அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சுமத்தியிருந்தார்.
70 வயயான துபாய் ஆட்சியாளருக்கு கடந்த 2004ஆம் ஆண்டில் ஆறாவது மனைவியானார் ஜோர்டான் இளவரசி.
இவர்களுக்கு 7, 11 வயதுகளில் இரு பிள்ளைகள் உள்ளனர்.
#துபாய்