மலேசியாவில் 93 பேருக்குப் பாதிப்பு

மலேசியாவில் 93 பேருக்குப் பாதிப்பு

2 mins read
9434cf4f-3961-44b7-853f-ea57c13cf275
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு வரும் சுற்றுப்பயணிகள் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். படம்: இபிஏ -

கோலாலம்பூர்: மலேசியாவில் மேலும் பத்து பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இதன் மூலம் மலேசியாவில் மொத்தம் 93 பேருக்குக் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 93 பேரில் 75 பேர் மலேசியர்கள், 15 பேர் சீன நாட்டவர், அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என, கொவிட்-19 நோயாளிகளைப் பற்றிய விவரத்தை நேற்றைய அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் காஸ்வே, இரண்டாம் இணைப்பு ஆகிய குடிநுழைவு சோதனைச்சாவடிகள் வழியாக ஜோகூருக்குள் செல்வோருக்கு காய்ச்சல் தென்பட்டால் அவர்

களுக்கு உள்நுழைவு அனுமதி மறுக்கப்படும் (NTL) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருகிவரும் கொவிட்-19 பரவலை அடுத்து, ஜோகூர் உட்பட மலேசியாவின் எல்லா அனைத்துலக உள்நுழைவு வாயில்களிலும் வெப்பநிலைச் சோதனை மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் அமான் ராபு கூறியுள்ளார். நேற்று முன்தினம் மலேசியாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83க்கு உயர்ந்துள்ளாது.

சிகிச்சை முடிந்து 23 பேர் வீடு திரும்பியிருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சின் நேற்றைய அறிக்கை தெரிவித்தது.

"யாருக்காவது காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

"அவர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு இருக்கக்கூடிய சாத்தியம் தென்பட்டால் அவர்கள் பெர்மாய் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவர்," என்றார் அவர்.

காய்ச்சல் இருந்தும், கொவிட்-19 பாதிப்பு இருக்கும் சாத்தியம் இல்லாதவர்கள் அருகில் உள்ள மருந்தகங்களில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுவர் என்றார் டாக்டர் அமான்.

"ஒருவேளை சிங்கப்பூரர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் குடிநுழைவுத் துறைக்கு சுகாதாரத் துறை தகவல் அனுப்பும். ஜோகூருக்குள் நுழையும் அனுமதி மறுக்கப்பட்டு NTL வழங்கப்படும்," என்றும் அவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை சிங்கப்பூரர் யாருக்கும் அவ்வாறு அனுமதி மறுக்கப்படவில்லை.

சிங்கப்பூரர்களுக்கு NTL வழங்குவதில் சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி ஜோகூர் குடிநுழைவு ஆணையம் செயல்படும் என்று ஆணையத்தின் இயக்குநர் பஹாருதீன் தாகிர் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, தென்கொரியாவின் டேகு, சியாங்டோ, சீனாவின் ஹுபெய், ஹுனான், மாநிலங்கள், ஈரான், இத்தாலி போன்ற சில நாடுகளின் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நகரங்களிலிருந்து வருவோருக்கு NTL வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.