கேரளாவில் மேலும் ஐவருக்கு பாதிப்பு

கேரளாவில் மேலும் ஐவருக்கு பாதிப்பு

2 mins read
ba048d59-c69c-4021-876b-d232f175550c
கோப்புப்படம்: ஏஎப்பி -

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் அவர்களது உறவினர்கள் இருவரும் கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தகவல் தெரிவித்துள்ளார். இதோடு இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39ஐ எட்டியது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேரும் அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு பத்தினம்திட்டாவுக்கு திரும்பியுள்ளனர்.

இத்தாலியின் வெனிஸ் நகரிலிருந்து கத்தார் தலைநகர் தோஹா வழியாக, கடந்த மாதம் 29ஆம் தேதி கொச்சி வந்து கார் மூலம் பத்தினம்திட்டாவுக்கு அவர்கள் சென்றனர்.

ஆனால், இத்தாலிக்குச் சென்றுவிட்டு வந்ததை அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவிக்கவில்லை. இவர்கள் 3 பேரும் பத்தினம்திட்டா திரும்பியபின், தங்களின் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அண்மையில் உறவினர்களுக்குக் காய்ச்சல் ஏற்படவே அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோதுதான், அவர்களுக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, தங்களின் உறவினர்கள் அண்மையில் இத்தாலி சென்று திரும்பிய விவரத்தைத் தெரிவித்தனர்.

இதையடுத்து இத்தாலியில் இருந்து திரும்பியவர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தில் ஒருவர் பாதிப்பு

இதற்கிடையே, ஓமன் நாட்டிலிருந்து சென்னை திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 45 வயது ஆடவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறினர்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு சளிக்காய்ச்சலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்ட அவர், மார்ச் 1ஆம் தேதி குடும்ப மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றார்.

மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மார்ச் 4ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொவிட்-19 கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது எட்டு குடும்ப உறுப்பினர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவருடன் தொடர்பில் இருந்த நண்பர்கள், மருத்துவர்கள் என 19 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.