கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த இத்தாலியில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டு மக்கள் வீட்டில் இருந்தபடியே சன்னல் ஓரமாக நின்று பாடுவதும் இசைக் கருவிகளை வாசிப்பதுமாக தங்களின் உணர்வுகளைச் சற்று வித்தியாசமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற இத்தாலிய அரசாங்கம் அதன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் பல கலாசார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் சில பிரபலங்கள் இணையம் வாயிலாக தங்களின் படைப்புகள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே மக்களும் கச்சேரி நடத்தத் தொடங்கிவிட்டனர். பிரபல மகரேனா பாடல் முதல் இத்தாலிய தேசிய கீதம் வரை தெருக்களில் ஒலிக்கும்படி செய்கின்றனர் வீட்டில் அடைந்து கிடக்கும் மக்கள்.
சமூக ஊடகம் வழி தொடங்கப்பட்ட இன்னொரு திட்டத்தால் இத்தாலியர்கள் தங்களின் வீட்டிற்கு வெளியே சுலோகங்களை ஒட்டுகின்றனர். 'இனி எல்லாம் சுகமே' என்று பொருள்படும் வார்த்தைகள் அவற்றில் இடம்பெறுகின்றன.
கொவிட்-19 கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடு இத்தாலி. அங்கு 17,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதுடன் 1,266 பேர் உயிரிழந்துள்ளனர்.
#கொவிட்-19 #கொரோனா #இத்தாலி #இசை


