மலாக்கா: மலாக்காவின் பெரிக்காத்தான் மாநில அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை என்று காடெக் சட்டமன்ற உறுப்பினரான ஜி.சாமிநாதன் கூறியுள்ளார்.
மலாக்காவின் ஜனநாயகச் செயல் கட்சித் தலைவர் தே கோக் கியூவைத் தாம் ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.
"நான் கட்சி மாறப்போவதாக வலம் வரும் செய்தியில் உண்மை ஏதும் இல்லை," என்று திரு சாமிநாதன் நேற்று தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத்தின் பக்கத்தான் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பொதுவான வாட்ஸ்அப் குழுவிலிருந்து விலகியதற்கான காரணத்தை திரு சாமிநாதன் தெரிவிக்கவில்லை.
அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக திரு சாமி
நாதன் மீது குற்றச்சாட்டு பதிவாகியது. ஆனால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடந்த மாதம் கைவிடப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய பொய்ச் செய்திகள் பரவும்போது அதைப் பற்றி அவர்கள் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்று மலாக்கா பயனீட்டாளர், சுற்றுப்புற சங்கத்தின் தலைவர் திரு கே.முரளி தெரிவித்தார்.

