மட்ரிட்: ஐரோப்பிய ஒன்றியத்தில் கொவிட்-19 கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினும் பிரான்சும் முடக்கப்பட்டுள்ளது.
எனவே இந்நாடுகளில் உணவுப் பொருட்கள், மருந்துகள் வாங்குவதற்கும் வேலைக்கு, மருத்துவமனைக்குச் செல்வது போன்ற முக்கிய, அவசர தேவைகளைத் தவிர்த்து மக்கள் வெளியே செல்ல அனுமதி கிடையாது.
ஸ்பெயினில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 15 நாட்கள் அவசரநிலை பிரகடனத்தையடுத்து மதுபானக் கூடங்கள், உணவுப் பொருள் விற்பனை செய்யாத கடைகளும் மூடப்பட்டன.
பொழுதுபோக்கு இடங்களான திரையரங்குகள், நீச்சல் குளங்கள், காற்பந்துத் திடல்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டன. கடந்த வியாழக்கிழமை முதல் ஸ்பெயினில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் உள்நாட்டு போக்குவரத்து திங்கட்கிழமை முதல் குறைக்கப்படும் என்றும் விமானம், ரயில், படகு சேவைகள் பாதியாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஸ்பெயினில் 47 மில்லியன் மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது.
நாடு முடக்கப்படுவதை அறிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், "நாம் நம் அன்புக்குரியவர்களையும் நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் காலம் மீண்டும் நிச்சயம் வரும். அந்நேரம் வரும் வரை, நமக்கு இப்போதைக்குத் தேவையான சக்திகளை நாம் வீணாக்கக்கூடாது," என்று கூறி அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த அறிவிப்பு வெளியான குறுகிய நேரத்திலேயே, பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பெகோனா கோம்சுக்கும் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
இத்தாலியை அடுத்து கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக உள்ள ஸ்பெயினில் நேற்று வரை 6,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 193 பேர் பலியாகினர்.

