சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க விமான நிலையங்களில் ஐரோப்பாவிலிருந்து திரும்புபவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கிருமித் தொற்றுக்கான புதிய மருத்துவப் பரிசோதனைகளைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.
சிகாகோ அனைத்துலக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளில் சிலர், தாங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது குறித்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தனர்.
இல்லினாய்ஸ் செனட்டர் டிக் டர்பின், சிகாகோ விமான நிலையத்தில் சில பயணிகள் எட்டு மணிநேரம் காத்திருக்க நேர்ந்ததாகத் தெரிவித்தார்.
பரிசோதனை நேரத்தை மேம்படுத்துவதற்காக விமான நிறுவனங்களுடன் தனது அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருவதாக உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் சாட் ஓநாய் கூறினார்.
டல்லஸ் ஃபோர்ட் வொர்த் மற்றும் டல்லஸ் விமான நிலையங்களிலும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.
இம்மாதிரியான நெரிசலான இடத்தில் காத்திருப்பதால், கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக சில சுகாதார வல்லுநர்கள் கூறுவதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,100 எனவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 எனவும் உள்ளது.
முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் ஐரோப்பிய நாடுகள் மீதான தடை, செவ்வாய்க்கிழமை முதல் அயர்லாந்து, பிரிட்டனுக்கும் நீட்டிப்பதாகத் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐரோப்பாவின் 26 நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
டிரம்ப்புக்கு தொற்று இல்லை
இதற்கிடையே, அதிபர் டிரம்ப்புக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கிருமித் தொற்று இல்லை என்று மருத்துவர் ஷான் கான்லி தெரிவித்தார். டிரம்ப் சந்தித்த ஒருவருக்குக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பரிசோதனை மேற்கொள்ளாதது கடும் விமர்சனங்களைக் கிளப்பியதையடுத்து அவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார்.

