புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107ஐ தொட்டுள்ளது. இந்த 107 பேருடன் தொடர்பில் இருந்த 4,000 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் இதை பேரிடர் சூழலாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த கொரோனா கிருமியைப் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கொரோனா தாக்குதலால் கர்நாடகாவில் ஒரு முதியவரும் டெல்லியில் ஒரு மூதாட்டியும் இறந்த நிலையில் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக பட்சமாக 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் 22 பேர் இக்கிருமி தாக்குதலுக்கு ஆளாகி யுள்ளனர்.
டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஏழு நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹரியானாவில் வெளிநாட்டினர் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் மூவரும் உத்தரப் பிரதேசத்தில் வெளிநாட்டினர் ஒருவர் உட்பட 12 பேரும் லடாக்கில் மூவரும் கொரோனா பாதிப்புக்குள் ளாகி சிகிச்சை பெறுகின்றனர்.
கர்நாடகாவில் ஆறு பேருக்கும் ஆந்திராவில் ஒருவருக்கும் கொரோனா கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளான வெளிநாட்டினர் 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 107 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் 9 பேர் உடல்நலன் தேறி வீடு திரும்பியுள்ளனர்.

