மணிலா: பிலிப்பீன்சின் தலைநகரான மணிலாவுக்குள் ஆட்கள் வருவதை நேற்று கட்டுப்படுத்தத் தொடங்கியது அந்நாட்டு போலிஸ். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் ஒரு மாத முடக்க நிலை நேற்றிலிருந்து ஆரம்பித்தது.
மணிலாவுக்குள் செல்லும் பிரதான சாலைகளில் அதிகாரிகள் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். பிலிப்பீன்சுக்குள்ளேயே இயங்கி வரும் உள்நாட்டு விமானப் பயணங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. பெருமளவில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் மற்றும் அனைத்து நிலைகளுக்குமான பள்ளிகள் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிலிப்பீன்சில் 111 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு பேர் உயிரிழந்துவிட்டனர்.
சீனா, இத்தாலி நாடுகளில் காணப்பெறும் அளவு கிருமித்தொற்று எண்ணிக்கை பிலிப்பீன்சில் இல்லாவிட்டாலும் கடந்த சில நாட்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்கு இரட்டிப்பாகிவிட்டன. மணிலாவின் மக்கள் தொகை மட்டுமே 12 மில்லியனாக உள்ளது.
இதற்கிடையே இந்த அதிரடி நடவடிக்கைகள் சற்று காலந்தாழ்த்து வந்துள்ளதாக பொது சுகாதார நிபுணர்கள் அதிபர் ரொடிரிகோ டுடெர்டெயைச் சாடினர்.
மணிலாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள முடக்க நிலை முழுமையாக இல்லாமல் சில விதிவிலக்குகள் உள்ளன. மக்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் சோதனைச் சாவடிகள் வழி செல்லவேண்டும். பேருந்துகளும் ரயில்களும் மணிலாவின் எல்லைப் பகுதிகளுக்குள் இயங்கும். பயணிகள் ஓர் இருக்கை தள்ளியே அமர்ந்திட வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.

