முதியோரை, அதாவது 70 வயதுக்கு மேற்பட்டோரை, தனிமைப்படுத்தும் திட்டம் ஒன்றை பிரிட்டன் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கவுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்வதில் பிரிட்டன் இதுவரை மற்ற ஐரோப்பிய நாடுகள் அளவுக்கு கடுமையாக நடந்துகொள்ளவில்லை. ஆனால், இந்த நிலை மாற உள்ளது.
இதன் தொடர்பில் இந்தக் கிருமித்தொற்றுக்கு எதிராக 70 வயதுக்கு மேற்பட்டோரை பாதுகாக்கும் முயற்சியாக அவர்களை நான்கு மாதங்கள் வரை தனிமைப்படுத்தும் திட்டம் ஒன்று அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்று பிரிட்டிஷ் சுகாதார அைமச்சர் மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார்.
இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐேராப்பிய நாடுகள் மக்கள் பெருமளவு கூடும் இடங்களை முடக்கி வைத்துள்ள நிலையில், பிரிட்டன் அவ்வாறு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"முதியோர், அபாயங்களுக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருப்போர் ஆகியோரைப் பாதுகாக்கும் பெரிய பொறுப்பு இருப்பதை நாங்கள் உணர்கிறோம். இதற்கென சரியான நேரத்தில் இந்தத் திட்டம் குறித்த விவரங்களை நாங்கள் வெளியிடுவோம்.
"பொது சுகாதாரத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவர்களை தனிமைப்படுத்தும் அதிகாரத்தை நாங்கள் கையில் எடுத்துக்கொள்ளப் போகிறோம்," என்று திரு ஹேன்காக் விளக்கினார்.
அத்துடன், இந்தக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரை தனிமைப்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்படும் என்றும் பெருந்திரளாக மக்கள் கூடும் கூட்டங் களைத் தடை செய்யவும் அரசாங்கம் தயார் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சுகாதார வளங்களுக்கு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்க, இந்தக் கிருமித்தொற்று உச்சகட்டத்தை எட்டும் காலத்தை நீட்டிக்கவும் பிரிட்டன் எண்ணம் கொண்டுள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய நிலையில், பிரிட்டனில் இந்தக் கிருமித்தொற்றுக்கு 1,140 ஆளாகியுள்ளனர் என்றும் இதனால் இதுவரை 21 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் கிருமித்தொற்று பிரிட்டனில் அடுத்த ஆண்டு வசந்தகாலம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
அத்துடன், இதில் கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அடுத்த 12 மாதங்களில் பொதுமக்களில் 80 விழுக்காட்டினர் இந்தக் கிருமித்தொற்றால் பாதிக்கப்படக்கூடும். இவர்களில் சுமார் 15 விழுக்காட்டினர் (அதாவது 7.9 மில்லியன் பேர்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம்," என்று பிரிட்டனின் மூத்த தேசிய சுகாதார சேவை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

