கோலாலம்பூர்: பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகளிடம் போதுமான ஆதரவு இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
தனது தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்ததற்கு அன்வார் இப்ராஹிமே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
இதையடுத்து புதிய பிரதமராக முகைதீன் யாசின் பதவியேற்றார்.
இதற்கு முன்பு பக்கத்தான் ஹரப்பானுக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 108 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று புளூம்ெபர்க்குக்கு அளித்த பேட்டியில் டாக்டர் மகாதீர் சொன்னார்.
திரு முகைதீன் பிரதமராக பதவியேற்றதும் நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால் இரண்டு மாதங்கள் தாமதமாக மே 18ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் ஏமாற்றமடைந்தன.
"எங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை, நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சினைக்குத் தீர்வாகாது," என்று 94 வயது மகாதீர் சொன்னார்.
சென்ற மாதம் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குள் சச்சரவு ஏற்பட்டதால் டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து அதிரடியாக விலகினார்.
2018ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் அறுபது ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அம்னோ கட்சியை தோற்கடித்து பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அந்த கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீரின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்த முகைதீன் யாசின் புதிய பிரதமரானார். இவருக்கு 2018ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய அம்னோவும் இதர கட்சிகளும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.
இதற்கிடையே கடந்த வாரம் பேட்டியளித்த அன்வார் இப்ராஹிம், எதிர்க்கட்சி கூட்டணியில் டாக்டர் மகாதீர் இடம்பெறவில்லை என்று கூறினார்.
இதனை டாக்டர் மகாதீர் மறுத்துள்ளார். திரு மகாதீர் தொடங்கிய பெர்சத்துக் கட்சி இரண்டாகப் பிரிந்து ஒரு பிரிவு, அரசாங்கத்தை ஆதரித்து வருகிறது.
இந்த பெர்சத்துக் கட்சிக்கு பிரதமர் முகைதீன் யாசின் இன்னமும் தலைவராக நீடிக்கிறார்.

