வாஷிங்டன்: கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அமெரிக்காவில் குழப்பமும் பதற்றமும் நிலவுகிறது. கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் விளைவாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்போர் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டும் முதலில் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரை 4,200 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் அந்நோயின் காரணமாக 73 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, பேரங்காடிகளில் காலியாக இருக்கும் அலமாரிகளைப் பார்த்து அமெரிக்கர்களின் மனதில் எட்டிப்பார்த்திருக்கும் பயம் கூடியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காததால் பலர் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக ஹார்வர்ட்டின் பொது சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் டாக்டர் தாமஸ் சாய் தெரிவித்தார்.
"மருத்துவர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள் போதுமான அளவுக்கு இல்லாமல் போகும்போது அதனால் ஏற்படும் பதற்றநிலையை நினைத்துப்பார்க்க முடியவில்லை. நெருக்கடிநிலை மோசமடைந்தால் நிலைமை மிகவும் பயங்கரமாக இருக்கும் என அஞ்சுகிறேன். அடுத்த சில நாட்களில், சில வாரங்களில் நடக்கப்போவதைப் பார்த்துதான் எதுவும் சொல்ல முடியும்," என்றார் அவர்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரைத் தனிமைப்படுத்த தேவையான விடுதிகளை வாஷிங்டன் மாநிலத்தில் அமைக்க அமெரிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இது அங்குள்ளவர்களை கோபமடையச் செய்துள்ளது. நோயுண்டவர்களை அங்கு தனிமைப்படுத்தினால் தங்களுக்கு கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாவதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவில் மரணம் அடைந்தோரில் பாதிக்கு மேற்பட்டோர் வாஷிங்டன் மாநிலத்தில் தலைநகரான சியாட்டலுக்கு அருகில் உள்ள கிங் கௌண்டியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் உள்ள வாஷிங்டன் மா
நிலத்தினரின் அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உணவகங்கள், உடற்பயிற்சிக்
கூடங்கள், மதுபானக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. தங்களைச் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள முடியாதவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக வாஷிங்டன் மாநில அதிகாரிகள் நான்கு சொத்துகளை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உணவகங்கள், மதுபானக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. "எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை," என்று கடந்த ஆண்டு திறக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளரின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.

