சீனாவில் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டவர்களின் தரவுகளைக் கொண்டு மேற்கொண்ட ஆரம்பகட்ட ஆய்வுகளில், 'ஏ' வகை ரத்தம் கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதே வேளையில், 'ஓ' ரத்த வகை கொண்டவர்கள் மீதான கிருமித்தொற்று பாதிப்பு சற்று குறைவாக இருப்பது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிருமி தொற்றிய 2,000க்கும் அதிகமானோரின் ரத்த மாதிரிகளைக் கொண்டு இந்த ஆய்வு மெற்கொள்ளப்பட்டது. கிருமித்தொற்று அதிகம் காணப்பட்ட வூஹான் வட்டாரத்தில் உள்ள ஆரோக்கியமானவர்களுடன் ஒப்பிட்டு இந்த ஆய்வு முடிவுகள் பெறப்பட்டன.
இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் அறுதியான முடிவுகளைப் பெற இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் குறிப்பிட்ட ஆய்வாளர்கள், கிருமி தொற்றியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றைத் திட்டமிட இந்த ஆய்வு முடிவுகள் உதவக்கூடும் என்றனர் அவர்கள்.
2003ஆம் ஆண்டு தாக்கிய சார்ஸ் கிருமித்தொற்றும் 'ஏ' வகை ரத்தம் கொண்டவர்களை அதிகம் தாக்கியதாகக் கூறப்பட்டது.
'ஏ' வகை ரத்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்திக்கொள்வது நல்லது என்றும் அந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வூஹான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸோங்னான் மருத்துவமனையின் Centre for Evidence-Based and Translational Medicine நிலையத்தின் மருத்துவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.
கொரோனா கிருமி பாதித்த, ஆய்வுக்குட்பட்டோரில் 65 விழுக்காட்டினர் 'ஏ' ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
#கொரோனா #'ஏ' #ரத்த வகை

