கொரோனா கிருமித்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் கிருமிக்கு எதிராக தென்கிழக்காசிய நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சமூகத்தினரிடையே கிருமிப் பரவல் பல நாடுகளில் ஏற்படவுள்ளதாக நிறுவனம் சுட்டியது.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் கடந்த சில வாரங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகளவு உயர்ந்துவிட்டன.
இதனால் எல்லைகளை மூடுவது, பள்ளிகளை அடைப்பது, ஊரடங்கு விதிப்பது, விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்வது போன்ற பல அதிரடி நடவடிக்கைகளை நாடுகள் செயல்படுத்த வேண்டியுள்ளது.
இதற்கிடையே சில தென்கிழக்காசிய நாடுகளின் பொது சுகாதார பராமரிப்பு அமைப்புகள் வலுவாக இல்லை என்றும் அதனால் விஸ்வரூபம் எடுக்கும் இந்தக் கிருமித்தொற்றை அந்நாடுகளால் சமாளிக்க முடியாது என்றும் கவலை எழுந்துள்ளது.
"மேலும் பலருக்குக் கிருமி தொற்றி விடாமல் தடுக்க நாம் உடனே நமது முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்," என்று நிறுவனத்தின் வட்டார இயக்குநர் பூனம் கெட்ரபால் சிங் கூறினார்.
பல கிருமிப்பரவல் குழுமங்கள் கண்டறியப்படுகின்றன. எச்சரிக்கையாகவும் திறமையாகவும் நடந்த கண்காணிப்பில் குழுமங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொவிட்-19 மேலும் பரவுவதைத் தடுக்கச் சமூகத்தினர் ஒன்றுபட்டு முயல வேண்டும் என்பது முக்கியமாவதாக அவர் குறிப்பிட்டார்.
"நாம் மேலும் பல நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும். அதுவும் உடனடியாக அவற்றைச் செய்ய வேண்டும்," என்றார்.
தென்கிழக்காசிய நாடுகளில் ஆக அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள் மலேசியாவில்தான் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றைய 117 புதிய கிருமித்தொற்று சம்பவங்களுடன் தற்போது அங்கு 790 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. சென்ற மாதம் கோலாலம்பூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டோரில் 514 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது. இந்தக் கிருமிப்பரவல் குழுமமே அந்நாட்டின் ஆகப் பெரிய குழுமமாக உள்ளது.
இதற்கிடையே மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் திங்கட்கிழமை இரவு அறிவித்தார்.
நேற்று முதல் நடப்புக்கு வந்த ஆணை இம்மாதம் 31ஆம் தேதியன்று முடிவுறும்.
கைகளைச் சுத்தமாகக் கழுவுவது, அணுக்கநிலையைத் தவிர்ப்பது போன்ற எளிய செயல்கள், கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் முக்கியமானவை. அவையே சமூகத்தில் கிருமித்தொற்று பரவலை வெகுவாகக் குறைக்கும் என்று திருவாட்டி சிங் வலியுறுத்திச் சொன்னார்.

