ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு வெளிநாட்டினர் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதோர், ஆஸ்திரேலியாவில் குடியிருக்காதோர் உள்ளூர் நேரப்படி நாளை (மார்ச் 20) இரவு 9 மணி முதல் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முடியாது என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் கிருமித்தொற்று சம்பவங்களைக் குறைப்பது இந்நடவடிக்கையின் நோக்கம். ஆஸ்திரேலியாவில் ஏறத்தாழ 600 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது. இதில் அறுவர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, இன்று நள்ளிரவு முதல் நியூசிலாந்துக்குள் நுழைய வெளிநாட்டவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நாடு திரும்ப முடியும் என்றாலும், ஏராளமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதால் நாடு திரும்புவதில் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் கூறினார். ஏற்கெனவே நியூசிலாந்துக்கு புறப்பட்டுவிட்டோர் நாடு திரும்ப முடியும் என்று அவர் சொன்னார்.
முன்னதாக, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என நியூசிலாந்து மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.நியூசிலாந்தில் இதுவரை 28 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது. அவர்களில் எண்மர் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்கள்.

