தென்கொரியாவின் டேகு நகரிலுள்ள தாதிமை இல்லத்தில் உள்ளவர்களிடம் புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக பதிவாகியுள்ள 152 சம்பவங்களையும் சேர்த்து, அந்நாட்டில் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 8,565ஆகக் கூடியுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக பதிவாகியிருந்த புதிய சம்பவங்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 100க்கும் குறைவாக இருந்தது. தென்கொரியாவில் மெதுவடைந்து வந்த கிருமித்தொற்று இப்போது மீண்டும் தீவிரமடைவதாக தெரிகிறது.
புதிய சம்பவங்களில் 97 சம்பவங்கள், தென்கொரிய தலைநகர் சோலுக்கு தென்கிழக்கிலுள்ள டேகு நகருடன் தொடர்புடையவை என்று தென்கொரிய நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் தெரிவித்தது. புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களில், எத்தனை பேர் தாதிமை இல்லத்துடன் தொடர்புடையவர்கள் என அது குறிப்பிடவில்லை.
கிருமித்தொற்று மீண்டும் உருவெடுத்திருப்பதால், டேகு அதிகாரிகள் ஏனைய தாதிமை இல்லங்களில் விரிவான சோதனைகளைத் தொடங்க முற்பட்டுள்ளனர். இந்தச் சோதனைகளில் 33,000க்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்டுள்ளனர்.