லண்டன்: ஐரோப்பாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை மிஞ்சிவிட்டது என்கிறது புளும்பர்க்கின் தகவல் தொகுப்பு.
ஐரோப்பாவில் 85,000 என்ற கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சீனாவில் பாதிக்கப்பட்ட 80,900 பேர் என்பதைவிட அதிகம்.
அதுபோல் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஐரோப்பாவில் கிட்டதட்ட 4,000ஐ எட்டியிருக்க, சீனாவில் அந்த எண்ணிக்கை 3,200 என்றுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கிருமித் தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் மட்டும் 2,978 பேர் பலியாகினர்.
இத்தாலிக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் முதியோர் இல்லம் ஒன்றில் மட்டும் 19 பேர் மாண்டதற்கு கிருமித் தொற்று காரணமாக இருக்கலாம் என்பது குறித்து குற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த இல்லத்தில் வசிக்கும் 130 பேரில் 70 பேருக்கு கிருமித் தொற்றியிருக்கலாம் என்று அங்கு வசிப்பவர்களின் உறவினர்கள் கூறியதாக ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கி
றது.
ஸ்பெயினில் இதுவரை 13,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கியது.
இன்னோர் ஐரோப்பிய நாடான பிரான்சில் 9,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 89 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264ஆக அதிகரித்தது.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் கிருமித் தொற்று இந்தளவுக்கு மிக வேகமாக பரவுவது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு சாத்தியமற்றது என்று தோன்றியதும் சீனா மற்றும் ஆசிய நாடுகளில் கிருமிப் பரவலைக் கட்டுபடுத்த நடைமுறைப்படுத்தப்பட்டதுமான சமூக தூர விதி, பயணக் கட்டுப்பாடுகள், மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு போன்றவற்றை இந்நாடுகள் செயல்படுத்தின.
மேலும், பரிசோதனை, மக்களைத் தனிமைப்படுத்துதல் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கிருமிப் பரவல் குறையக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள ஜெர்மனியில், புதன்கிழமை நிலவரப்படி 8,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் பலியாகினர்.
ஜெர்மனி தலைவர் ஏஞ்சலா மெர்கல் தொலைக்காட்சி வழி நாட்டு மக்களிடையே பேசிய போது, கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு மக்களிடம் வலியுறுத்தினார்.
மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இந்த கிருமித் தொற்று என்றும் அவர் சொன்னார்.

