கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது. கிருமி தொற்றும் வேகமும் அதிகரித்துவிட்டது. முதல் மூன்று மாதங்களில் நூறாயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த 12 நாட்களிலேயே மேலும் 100,000 பேரை கொரோனா கிருமி தொற்றிவிட்டதாக உலக சுகாதார நிறுவனத் தரவுகள் கூறுகின்றன.
கிருமித்தொற்று தொடங்கிய இடமான சீனாவைக் காட்டிலும் இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.
சீனாவில் இதுவரை கிட்டத்தட்ட 81,000 பேரைக் கிருமி பாதித்துள்ளது. அவர்களில் 3,248 பேர் மாண்டுவிட்டனர்.
இத்தாலியில் இதுவரை 41,000 பேரை கிருமி தொற்றிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405ஆக அதிகரித்து உள்ளது.
நேற்று ஒரே நாளில் அங்கு 427 பேர் மரணம் அடைந்தனர்; புதிதாக 5,322 பேரைக் கிருமி தொற்றியது.
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த இத்தாலி அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்தாலும் அது குறைந்தபாடில்லை.
“இயல்பறிவைப் பயன்படுத்துங்கள்; முடிந்தளவு எச்சரிக்கையாக இருங்கள்,” என்று இத்தாலிய பிரதமர் ஜுசெப்பே கோன்டே அறைகூவல் விடுத்துள்ளார்.
உணவுக்கடைகள், மருந்துக் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்தையும் மூடி, நாட்டை முடக்கி இருப்பதை 96% இத்தாலியர்கள் வரவேற்றுள்ளதாக ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் சில காலத்திற்கு நீட்டிப்பதைத் தவிர்க்க முடியாது என்று திரு கோன்டே குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்றாலும் இப்போதைய கட்டுப்பாடுகளை மக்கள் மதித்து நடக்காவிடில் அரசாங்கம் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மளிகைப் பொருட்கள் வாங்க அல்லது வேலைக்குச் சென்று வர போன்ற பொருத்தமான காரணம் இல்லாமல் வீதிகளில் நடமாடுவோருக்கு 206 யூரோ (S$320) அபராதம் விதிக்கப்படுகிறது.
இத்தாலி, சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரான் (1,284), ஸ்பெயின் (833), பிரான்ஸ் (372) ஆகிய நாடுகளில் கொரோனாவால் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.