ஜகார்த்தா: கொரோனா கிருமி தொற்றியவர்களுடன் 500,000 மேற்பட்டோர் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று இந்தோனீசிய அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
'அபாயகரமான' இந்த 600,000 கும் 700,000க்கும் இடைப்பட்டோர் நாடு முழுவதும் பரவி இருக்கின்றனர் என்றும் தெற்கு ஜகார்த்தாதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரம் என்றும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.
"நாங்கள் வீட்டுக்கு வீடு சென்று விரைவு சோதனையை நடத்தவிருக்கிறோம்," என்று கூறிய அதிபர், அதிகம் பாதிக்கப்பட்ட இதர பகுதிகள் பற்றி தெரிவிக்கவில்லை.
சுகாதாரம் மற்றும் பொருளியல் பிரச்சினைகளைச் சமாளிக்க அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தப் போவதாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ சூளுரைத்தார்.
கொரோனா கிருமித்தொற்றில் இந்தோனீசியா அலட்சியம் காட்டுகிறது என்று புகார் கிளம்பி உள்ள நிலையில், நேற்று நேரடியாக தேசிய தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்றை அதிபர் வாசித்தார்.
கொரோனா கிருமிச் சோதனைகளை இந்தோனீசியா வேகப்படுத்தி இருப்பதாக அவர் கூறினார். கொரோனா நோயாளிகளின் தொடர்புகளை அடிப்படையாக வைத்து பல வட்டாரங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தோனீசியா கொரோனா கிருமி நோயாளி பற்றி மார்ச் 2ஆம் தேதி முதல் முறையாக அறிவித்தது. சளிக்காய்ச்சல் காரணமாக பலரும் மாண்டுவிட்டார்கள். அவர்கள் மரணத்திற்குப் பிறகுதான் அவர்களைப் பாதித்து இருந்தது கொரோனா என்பது தெரியவந்தது.
உலகிலேயே ஆக அதிக மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்தோனீசியா கொரோனா சோதனைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி 369 பேரை கொரோனா தொற்றி இருப்பதாகத் தெரியவந்தது என்று கொரோனா சிறப்பு நிர்வாக அமைப்பின் பேச்சாளர் யுரியாந்தோ தெரிவித்தார்.
இதனிடையே, இந்தோனீசியாவில் கிருமி தொற்றியவர்கள் எண்ணிக்கை மதிப்பிடப்படுவதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று அந்த நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தோனீசியாவில் கொரோனா மரணம் 32ஐ தொட்டுள்ளது. பரிசோதனைகளை முடுக்கிவிட்டு அதனுடைய முடிவுகள் தெரியவரும் போதுதான் உண்மையில் அது எத்தனை பேரைப் பாதித்து இருக்கிறது என்பது தெளிவாகப் புரியவரும் என்று கல்லா என்ற செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் கூறினார்.
இந்தோனீசியா சந்திந்து வரும் மற்றொரு சவால்களில் ஒன்றாக, கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக இரண்டு வாரங்களுக்கு பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஜகார்த்தா ஆளுநர் அனிஸ் பஸ்வேடானின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, ஜகார்த்தாவில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்தின.
ஜகார்த்தாவில் மட்டும் 17 பேர் கொரோனா கிருமித்தொற்றால் மடிந்துள்ளனர். 369 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜகார்த்தா நூருல் யாக்கின் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்குச் சென்றுகொண்டிருந்த திரு டிரிடி எனும் ஹோட்டல் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி, "வாழ்வும் சாவும் இறைவனின் கையில் உள்ளது," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
தொழுகைக்குச் சென்ற மற்றொருவரான 15 வயது அரிஃப் நசிப் அரிஃபின், "முஸ்லிம்கள் கொரோனா கிருமி பற்றி பயப்பட தேவையில்லை. பள்ளிவாசலுக்குச் சென்றதால் கிருமி தொற்றி மாண்டால், அது புனித மரணம்," என்று கூறினார்.
திரு அனிஸ் நேற்று முன்தினம் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையையும் கிறிஸ்தவர்கள் ஞாயிறு பிரார்த்தனையையும் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

