கொரோனா கிருமி பரவலால் நாடுகள் முடங்குவதாலும் பதற்றத்தின் காரணமாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிப்பதாலும் உலகளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக பொருளியல், விவசாயத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் வேளையில், உலகப் பொருளியலுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பணக்கார நாடுகள் உதவி செய்து வருகின்றன.
உலகம் முழுவதும் இதுவரை 270,000க்கும் அதிகமானோரைத் தொற்றி, 11,000க்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்துவிட்ட கொள்ளைநோயான கொரோனா, உலகையே நிலைகுத்தச் செய்துள்ளது.
இரண்டாம் உலகப் போர், 1918ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஸ்பானிய சளி, காய்ச்சல் பரவல் உள்ளிட்ட முக்கிய வரலாற்று நிகழ்வுகளுடன் கொரோனா கிருமி ஒப்பிடப்படுகிறது.
சிங்கப்பூர் முதல் அமெரிக்கா வரை உலகின் பல நாடுகளில் உள்ள பேரங்காடிகளில் அரிசி, கை சுத்திகரிப்பான், கழிவறைத் தாள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசை பிடித்து நின்றனர்.
தானிய வகை பொருட்களை ஏற்றுமதி செய்யும் தாய்லாந்தில் அரிசி விலை, 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஆக அதிகமாக உயர்ந்துள்ளது.
பிரான்சின் தானிய உற்பத்தித்துறை, தொற்சாலைகளையும் துறைமுகங்களை தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான சரக்கு வாகனங்களையும் ஊழியர்களையும் தேடுவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு சில நாடுகள் எல்லைகளை மூடியிருப்பதால், உணவு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
இவ்வாண்டு கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
#உலகம் #உணவுப்பொருள் #விலை உயரும் அபாயம்