பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ெகாரோனா கிருமித்தெற்றால் மருத்துவர் ஒருவர் மரணமடைந் துள்ளார். அந்த நாட்டில் இந்தக் கிருமிக்கு மொத்தம் ஒன்பது பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் நேற்று ராணுவமும் வீதியில் இறங்கியது. போலிசுக்கு இந்தப் பணியில் அது உதவி வருகிறது.
மலேசியாலில் பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள துவாங்கு ஃபாசியா மருத்துவமனையைச் சேர்ந்த 48 வயது மருத்துவர், கொரோனா கிருமி காரணமாக நேற்று முற்பகல் 10.33 மணிக்கு இறந்துவிட்டார் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹசிம் அப்துல்லா அறிவித்தார்.
அந்த மருத்துவர் துருக்கி சென்று இருந்தார் என்றும் அவர் மார்ச் 8ஆம் தேதி திரும்பி வந்தார் என்றும் அவர் கூறினார். மருத்துவருக்கு கொரோனா தொற்றி இருப்பது மார்ச் 18 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு மலேசியாவில் தான் அதிகம். சனிக்கிழமை நிலவரப்படி அங்கு 1,183 பேரைக் கொரோனா பாதித்து இருந்தது.
இதனிடையே, மெர்காஸ் 11 படைப்பிரிவைச் சேர்ந்த மலேசிய ஆயுதப்படைகள் வீதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஏர் டைம்ஸ் நியூஸ் நெட்வொர்க் அமைப்பு தெரிவித்தது.
மலேசியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்ற புதன்கிழமை முதல் பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் பலரும் வீதிகளில் நடமாடுகிறார்கள் என்பதால் போலிசுக்கு உதவியாக ராணுவமும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி சென்ற வெள்ளிக்கிழமை அறிவித்து இருந்தார்.
அந்தக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் பணியில் இருக்கும் ராணுவத்தினர், பொதுமக்கள் மீது படைபலத்தைப் பயன்படுத்துவார்கள் என்று வாட்ஸ்அப் செயலியில் பரவிய குரல் பதிவைத் தற்காப்புப் படை தலைமை தளபதி அஃபென்டி புவாங் மறுத்தார். போலி செய்திகளைப் பரப்பி சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் எச்சரித்தார்.
இதனிடையே, ஆறு போலிஸ்காரர்கள் உடலில் கொரோனா அறிகுறி தெரியவந்துள்ளதாகவும் பரிசோதனை முடிவுகளுக்காக அவர்களின் உறவினர்கள் 335 பேர் காத்து இருப்பதாகவும் மலேசிய போலிஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹமித் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூர் அருகே இருக்கும் ஒரு பள்ளிவாசலில் நடந்த நான்கு நாள் சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர்கள் இப்போது அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும் அவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் ஏற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டார். அந்தச் சமய நிகழ்ச்சிக்கும் தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா காரணமாக குறைந்தபட்சம் 840 பேர் பாதிக்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்
படுகிறது. இதன் தொடர்பில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.

