சிட்னி: கொரோனா காரணமாக பொருளியலுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அரசாங்கம் மேலும் A$66 பில்லியன் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதேவேளையில், மக்கள் நெருங்கி கலந்துறவாடாமல் 1 மீட்டர் இடைவெளி நியதியைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசர அவசியம் என்பதால் அந்த விதியை அமல்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்தார்.
பொருளியலை ஊக்குவிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்கெனவே A$17.6 பில்லியன் திட்டத்தை அறிவித்து உள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் 1 மீட்டர் இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று அரசாங்கம் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டபோதிலும் மக்கள் பலரும் அதை அலட்சியப்படுத்துவதாகத் தெரிகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆகையால் இந்த விதியைக் கடுமையாக அமல்படுத்தப்போவதாகப் பிரதமர் சூளுரைத்தார். சிட்னி நகரின் பெரும்பாலான கடற்கரைகளை அந்த நகர அதிகாரிகள் மூடிவிட்டார்கள். ஆஸ்திரேலியாவில் கொரோனா ஏழு பேரைக் கொன்று இருக்கிறது. அங்கு 1,098 பேரை அந்தக் கிருமித் தொற்றி இருக்கிறது.
மாகாணங்களின் எல்லைகளை மூடவும் தேவையற்ற சேவைகளை நிறுத்திவிடவும் அதிகாரிகள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

