லம்பார்டி: இத்தாலியில் கொவிட்-19 கிருமித் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் நாளும் புதிய உச்சத்தை எட்டும் நிலையில், நேற்று முன் தினம் ஆக அதிகமாக சுமார் 793 பேர் உயிரிழந்தனர்.
இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டதட்ட ஐயாயிரத்தை எட்டியது. இது உலகளவில் ஏற்பட்ட உயிரிழப்பில் 38.3 விழுக்காடாகும்.
கிருமித் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் கடந்த வியாழக்கிழமை சீனாவை மிஞ்சியது இத்தாலி.
இத்தாலி முழுவதும் மொத்தம் 53,578 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இத்தாலியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு லம்பர்டி பகுதியில் மட்டும் 3,095 பேர் மாண்டனர். 25,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த எட்டாம் தேதி முதல் லம்பர்டி முடக்கப்பட்டிருந்தாலும் அங்கு கிருமிப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.
இதையடுத்து, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இது நாட்டின் மிகக் கடினமான நெருக்கடி நிலை என்று கிருமிப் பரவலைக் கூறிய இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
அதன்படி கிருமிப் பரவலில் இருந்து உயிர்களைப் பாதுகாக்கும் வகையில், இத்தாலியில் தொழிற்சாலைகளும் முற்றிலும் அத்தியாவசியமற்ற அனைத்து உற்பத்திகளும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நிறுத்தப்படும்.
இதுபற்றி பேசிய பிரதமர், "உற்பத்தியை குறைத்துள்ளோமே தவிர முற்றிலும் நிறுத்தவில்லை," என்றார்.
லம்பர்டி பகுதியிலும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் அதிபர் அட்டிலியோ ஃபோண்டனா.
அதையடுத்து அனைத்து திறந்தவெளி வார சந்தைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் ரயில்வே உள்ளிட்டவற்றைத் தவிர கட்டடங்களில் நடைபெறும் அனைத்து பணிகளும் நிறுத்தப்படும்.
வங்கிகள், அஞ்சலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல் பொது போக்குவரத்தும் தொடர்ந்து இயங்கும்.

