லண்டன்: கிருமிப் பரவலைத் தடுக்க நாடுகள் தங்கள் சமூகத்தை வெறுமனே முடக்குவது போதாது என்றும் அவை மீண்டும் எழாமல் இருக்க பொது சுகாதார நடவடிக்கைகள் தேவை என்றும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் மைக் ரயான் நேற்று தெரிவித்தார்.
"நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது என்னவென்றால், நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது, கிருமித் தொற்று உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவது, அவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவது," என்று மைக் ரயான் பிபிசியின் ஆண்ட்ரூ மார் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.
"வலுவான பொது சுகாதார நடவடிக்கைகளை நாம் இப்போது முன்னெடுக்கவில்லை என்றால், முடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது, கிருமித் தொற்று மீண்டும் தலையெடுக்க வாய்ப்புள்ளது," என்றார்.
சாத்தியமான ஒவ்வொரு சந்தேக நபரையும் சோதிக்க கடுமையான நடவடிக்கைகளுடன் கட்டுப்பாடுகளை இணைத்த சீனா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவின் எடுத்துக்காட்டுகள் ஐரோப்பாவிற்கு முன் மாதிரியை வழங்கியுள்ளதாக ரயான் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் தொற்றுநோயின் மையமாக ஆசியா மாறுவதைத் தடுத்ததாகவும் அவர் சொன்னார்.

